காஞ்சிபுரம்: அனைத்துலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், செஞ்சிக்கோட்டை ஆகியவற்றை அங்கீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, நேரடியாக யுனெஸ்கோ அமைப்பிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்கீழ், இயங்கி வருகிறது யுனெஸ்கோ (கல்வி மற்றும் கலாசார அமைப்பு).
தமிழகத்தில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள சோழர் கால சிவபெருமான் கோவில்கள், ஊட்டி மலை ரயில் ஆகியவை ஏற்கெனவே யுனெஸ்கோ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டை ஆகியவற்றுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முடிவெடுத்துள்ள தொல்லியல் துறை, இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பிடம் பரிந்துரைத்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.