சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும் பிராமண வேட்பாளர்களுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, ஒவ்வோர் அரசியல் கட்சியும் தேர்தலுக்கான வியூகத்தை வகுத்து வருகிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தை, கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், வாக்களிப்பு நிலையக் குழுக்களை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
போட்டியிடும் கட்சிகள் மற்றும் கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வுக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பணிகளில் நாம் தமிழர் கட்சியும் முழுவீச்சுடன் இறங்கியுள்ளது.
தனித்துத்தான் போட்டி என்று தேர்தலுக்கு ஓராண்டு காலத்துக்கு முன்பாகவே அது அறிவித்திருந்தது. கட்சி உட்கட்டமைப்பு பணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தி வருகிறது.