நாகப்பட்டினம்: நாகை - இலங்கைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சேவைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு வாரத்தில் ஐந்து நாள்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 8ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் இனிமேல் கப்பல் சேவை இயக்கப்படும் என்று சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
‘சிவகங்கை’ கப்பல் சேவை கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, பயணிகள் முன்பதிவு குறைந்ததால் செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் மூன்று நாள்களாகக் குறைக்கப்பட்டது.
பின்னர், சனிக்கிழமை உட்பட நான்கு நாட்களுக்கு கப்பல் சேவை செயல்பட்டு வந்தது.
முன்பதிவு அதிகரிப்பு
இந்நிலையில், தற்போது இந்தக் கப்பல் சேவைக்குப் பயணிகளிடம் அதிக வரவேற்பு கூடியுள்ளது. அத்துடன், பயண முன்பதிவும் அதிகரித்து உள்ளதால் இனி வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இந்தக் கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது.