கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகளில் ஊர்களின் பெயரும் தெருக்களின் பெயரும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதனால், வெளியூரிலிருந்து வரும் தமிழ் பேசும் மக்கள் கன்னட மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறும் நிலை உள்ளது.
இதையடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இக்கிராமத்து தகவல் பலகைகளில் தமிழிலும் எழுதப்பட வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் பாகலூர், பேரிகை உள்ளிட்ட கிராமங்கள் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “ஓசூர், அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் தெலுங்கு, கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளதால் பெயர்ப் பலகைகள் கன்னட மொழியில் மட்டும் வைக்கப்பட்டுள்ளன.
“எனவே, இக்கிராமங்களில் உள்ள அனைத்து தகவல் பலகையிலும் தமிழ் மொழியிலும் ஊர், தெருக்களின் பெயர்கள் இடம்பெறவும், வணிக நிறுவனங்கள் கட்டாயமாகத் தமிழ்மொழியில் பலகைகளை வைக்கவும் மாவட்ட நிர்வாகம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளனர்.