சென்னை: எந்தவோர் அரசியல் கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமது பெயர் அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஜினியின் உத்தரவுப்படி மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிய இயக்கம் தொடங்கியுள்ளார். அதில், 18 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தாம் வெளியிட்ட காணொளியில், தாம் ரஜினியின் அரசியல் கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்ததாகவும் சூழ்நிலை காரணமாக பாஜகவில் சேர வேண்டியிருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து, கோவை உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டினர்.
எனவே, அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியதன் பின்னணியில் ரஜினி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஜினியின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரஜினியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் நடிகர் ராகவா லாரன்சும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி, ரஜினியின் பெயரை அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார்.

