சென்னை: நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சென்னை, மும்பை, கோல்கத்தா, லக்னோ, பெங்களூரு எனப் பல்வேறு நகரங்களில் காலவரையற்ற போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்திலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மறியல், ஆளுநர் மாளிகை, முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் எனப் பல்வேறு தரப்பினரின் ஆதரவும் கிடைத்தது.
டெல்லி போராட்டம் கைவிடப்பட்டதும் தமிழகத்திலும் மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டன. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை மாணவர்கள் தரப்பு உச்ச நீதிமன்ற விசாரணையின்போது முன்வைத்தது.
இதையடுத்து, மாணவர்கள் மீதான வழக்கைக் கைவிட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்பதை உறுதிசெய்துள்ளார்.

