கோவை: கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) இரண்டு புதிய விமானச் சேவைகள் தொடங்கப்பட்டன. கோவை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கோவையில் இருந்து ஷீரடி மற்றும் சிங்கப்பூருக்குப் புதிய விமானச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் அக்டோபர் 27 மாலை நடந்த தொடக்கவிழாவில், விமான நிலைய மேலாளர் (இயக்குநர் பொறுப்பு) ராகவ் சுவாமிநாதன், இண்டிகோ மேலாளர் (பாதுகாப்பு) விக்னேஷ், விற்பனை அதிகாரி (தமிழ்நாடு) ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் இருந்து முதல்முறையாக ஷீரடி மற்றும் சிங்கப்பூருக்கு விமானச் சேவைகளை தொடங்கியுள்ளோம். இரண்டு விமானங்களும் வாரத்தில் அனைத்து நாள்களிலும் இயக்கப்படும். கோவையில் காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.10 மணிக்கு ஷீரடி சென்றடையும்.
“கோவையில் இருந்து ஷீரடிக்குச் செல்ல மட்டுமே தற்போது விமானச் சேவை வழங்கப்படுகிறது. மறுபுறம் ஷீரடியில் இருந்து கோவைக்கு விமானச் சேவை தொடங்கப்படவில்லை. அதேபோல, கோவையில் இருந்து இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும்.
“சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு காலை 6.10 மணிக்கு விமானம் வந்தடையும். முதல் நாளில் ஷீரடிக்கு 160 பேர், சிங்கப்பூருக்கு 80 பேர் பயணம் மேற்கொண்டனர். இரண்டு சேவைகளுக்கும் ‘ஏர்பஸ் ஏ320’ ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய விமானங்களில் 186 பேர் (விமானிகள், பணிப்பெண்கள் தவிர்த்து) பயணிக்க முடியும்,” என்று தெரிவித்தனர்.

