சென்னை: இணையம் வழியாக மோசடியில் இழந்த பணத்தை விரைவில் மீட்பதற்கு உதவியாக ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ என்ற புதிய முறையைத் தமிழகக் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய மின்னிலக்க யுகத்தில், இணையம்வழி பணப் பரிவர்த்தனைகள் எளிதில் மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளையில் இணையவழி நிதி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
பகுதிநேர வேலை வாய்ப்பு மோசடி, மின்னிலக்க கைது மோசடி மிரட்டல், போலிக்கடன் செயலி, யுபிஐ மற்றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்வேறு வடிவங்களில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இணையவழி நிதி மோசடிப் புகார்களை விரைவில் பதிவு செய்து, இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த தமிழக காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய உள்துறை அமைச்சின் வழிகாட்டுதலின்படி, 1930 என்ற உதவி எண்ணுடன் இந்தப் புதிய வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இணைய மோசடியில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான நிதி மோசடிப் புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்புடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’-ஆகப் பதிவு செய்யப்படும்.
பின்னர், புகார் அளித்தவருக்கு, ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். புதிய சட்ட விதிகளின்படி, புகார்தாரர் தனது புகாரை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் மூன்று நாள்களுக்குள் நேரில் முன்னிலையாக வேண்டும்.
புகார்தாரர் நேரில் முன்னிலையாகி உறுதிப்படுத்தியதும் அந்த ‘இ - ஜீரோ எஃப்ஐஆர்’ விவரம் அதிகார வரம்புடைய காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு வழக்கமான எஃப்ஐஆர்-ஆகப் பதிவு செய்யப்படும்.
இம்முறையில் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்கை விரைவாக முடக்க முடியும் என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.

