திருச்சி: மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ஜூன் 11ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், புதிய முனையத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய முனையம் செயல்படுவதாக இருந்தது.
எனினும், ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் காரணமாக இம்முனையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பயணிகளைக் கையாள்கிறது திருச்சி விமான நிலையம்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
புதிய விமான முனையத்தில், மொத்தமாக 19 விமான நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பழைய முனையம் 11,700 சதுர மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிய முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தற்போது ஒரே சமயத்தில் 650 பயணிகளைக் கையாள முடியும் எனில், புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்த எண்ணிக்கை 3,480ஆக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜூன் 11ஆம் தேதி புதிய முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஐந்து மாத தாமதத்துக்குப் பின்னர் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வருவது பயணிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

