சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அருண் தலைமையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது காவல் ஆணையர் அருண், “டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
“அதிவேகமாகச் செல்லும் வாகனங்களையும் பந்தயங்களில் ஈடுபடும் மோட்டார் வாகனமோட்டிகளையும் கண்காணிக்க, சோதனை குழுக்களை அமைக்க வேண்டும்.
“மேலும், டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. அதனால், மெரினா, நீலாங்கரை, பெசன்ட் நகர், சாந்தோம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் அதற்கான முன்னேற்பாடுகளைக் காவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
“கடற்கரை மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைக்க வேண்டும். அதேபோல், அனைத்து முக்கிய இடங்களிலும் ஆளில்லா வானூர்தி மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
“அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் அவசர சிகிச்சை வாகனங்களை மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
“மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யவேண்டும்,” என்று அவர் கூறினார்

