சென்னை: அண்மையில் திருமணமாகி இந்தோனீசியாவின் பாலித்தீவுக்குத் தேனிலவு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இணையர், விரைவுப்படகில் சென்றபோது, படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது. மருத்துவர்களான இருவரும் புகைப்படம் எடுப்பதற்காக விரைவுப்படகில் சென்றதாகக் கூறப்பட்டது.
லோகேஷ்வரன் - விபூஷினா என்ற இவ்விருவருக்கும் இம்மாதம் 1ஆம் தேதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடைபெற்றதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவித்தது.
இந்நிலையில், மகள் இறந்த தகவல் கிடைத்ததையடுத்து, விபூஷினாவின் தந்தையும் உறவினர்கள் சிலரும் இந்தோனீசியா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையே மீட்கப்பட்ட நிலையில், விபூஷினாவின் உடல் மறுநாள்தான் கிடைத்தது.
இதனையடுத்து, அவர்களின் உடல்களைச் சென்னக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இச்செய்தியை அறிந்து, விபூஷினாவின் சொந்த ஊரான செந்நெற்குப்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.