புதுச்சேரி: கேரள மாநிலத்தில் நிபா கிருமி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் அத்தொற்றால் இருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரள அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி மாநிலப் பகுதியான மாஹேவில் இருக்கும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 17ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.