திண்டிவனம்: பாமக தலைவரும் தனது மகனுமான அன்புமணியுடன் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சியின் இளையரணித் தலைவராக தம்மால் நியமிக்கப்பட்ட முகுந்தன் அந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்று அவர் திண்டிவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திட்டவட்டமாக அறிவித்தார்.
“பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் முகுந்தனை இளையரணித் தலைவராக நான்தான் அறிவித்தேன். அதற்கான நியமனக் கடிதம் அவருக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவர் அந்தப் பொறுப்பில்தான் நீடிப்பார்.
“எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் கருத்து வேறுபாடும் இல்லை. இதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்,” என்றார் ராமதாஸ்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத் தரும் வரை பாமக போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.