மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவத் திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை திருமங்கலம் அருகே அமைந்துள்ளது கரும்பாறை முத்தையா கோவில். அங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.
அக்கோவிலைச் சுற்றியுள்ள கிராமவாசிகள், திருவிழாவின்போது கறுப்புநிற ஆட்டுக் கிடாய்களை நேர்த்திக்கடனாகச் செலுத்துவது வழக்கம்.
அவ்வகையில், வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) இரவு 1 மணியளவில் கரும்பாறை முத்தையா கோவிலுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட 56 கிடாய்கள் வெட்டப்பட்டன.
அதன்மூலம் கிடைத்த 1,000 கிலோ கறி, 4,000 கிலோ அரிசியைக் கொண்டு விருந்து சமைத்து, வந்திருந்தோருக்குப் பரிமாறப்பட்டது.
செக்கானூரணி, கரடிக்கல், மேல உரப்பனூர் உள்ளிட்ட பத்து ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் இந்த அசைவத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
விருந்துண்டதும் இலைகளை எடுக்க மாட்டார்கள் என்பது இத்திருவிழாவின் இன்னொரு முக்கிய அம்சம்.
திருவிழா முடிந்து ஒரு வாரத்திற்குப் பின்னரே பெண்கள் இந்தக் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்லலாம்.