சென்னை: விலை உயர்ந்த கைப்பேசிகளைக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி திருவண்ணாமலையில் மோசடி செய்த மகாராஷ்டிரக் கும்பலைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை பூந்தமல்லிப் பகுதியில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருபவர் சத்தியராஜ், 31. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கடந்த திங்கட்கிழமை (மே 4) அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரித் தெருவில் தமது காரை நிறுத்திவிட்டு அதனுள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நால்வர், தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது என்றும் மருத்துவச் செலவுக்குப் போதுமான பணம் இல்லாததால் தங்களிடம் உள்ள விலை உயர்ந்த கைப்பேசியை வைத்துக் கொண்டு பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சத்தியராஜிடம் கேட்டுள்ளனர்.
விலை அதிகமுள்ள கைப்பேசி குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என ஆசைப்பட்ட சத்தியராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து, அதனை வாங்கிக்கொண்டார். பின்னர் மாலையில் வீடு சென்று கைப்பேசியை இயக்கியபோது அது செயல்படவில்லை.
கைப்பேசி பழுதுபார்க்கும் கடைக்கு சென்று சோதித்தபோது அது போலியான கைப்பேசி எனத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் பெண் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கைப்பேசியைக் காட்டி மோசடி செய்பவர்கள் என்றும் தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த 26 போலி கைப்பேசிகளையும் 27 மின்னேற்றிகளையும் 9 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணை தொடர்கிறது.

