சென்னை: இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்றார்.
பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வாக்களிக்கும் முறை எளிமையாக்கப்படும் என்றும் வாக்குப்பதிவின்போது இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு விகிதம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்படலாம் என்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் பொய்ச் செய்திகள் கண்காணிக்கப்படும் என்றும் திரு ஞானேஷ்குமார் கூறினார்.
“ஜனநாயகத்தின் தாயாகவும் உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் திகழும் நாடு இந்தியா. உலகில் வெளிப்படையான, நேர்மையான தேர்தலை நடத்தும் அமைப்பாக இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது.
“விரைவில் தமிழ்நாட்டில் சட்டம்அன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா. எனவே, தமிழக வாக்காளர்கள் அனைவரும் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்,” என்று ஞானேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் தேர்தல் ஜனநாயக நடைமுறையைக் கடைப்பிடித்ததாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துலக மாநாட்டின் மூலம் தமிழகத்தில் 10ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை குறித்து உலகுக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
தமிழகத்தில் தொன்மையான ஜனநாயக மதிப்பீடுகள் இருந்ததை அறிந்து, மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தேர்தல் ஆணையர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், திரு ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த இரு நாள்களாகத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர்.

