சென்னை: கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, விதிமீறல் கட்டடங்களின் பெருக்கத்தால் சென்னை மாநகரம் ‘கான்கிரீட்’ காடாக மாறிவிட்டதாக அவர்கள் கோபத்துடன் விமர்சித்தனர்.
மேலும், விதிமீறல் கட்டடங்களால் மழைக் காலங்களில் சென்னை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றும் நீதிபதிகள் சுட்டினர்.
விதிமீறிக் கட்டப்படும் கட்டடங்கள் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதன் காரணமாக விதிமீறல் கட்டடங்களுக்கு அருகே வசிப்பவர்கள் மட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் அனைவருமே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யாமல், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக செயல்படுவதாக நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.

