சென்னை: தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவை கடந்த இருநாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கடந்த 7ஆம் தேதி கேரளாவுக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்துத் துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
இதேபோல், கடந்த ஏழு நாள்களாகக் கர்நாடகப் போக்குவரத்துத் துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளைத் தடுத்து ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ. 2.20 லட்சம் வரை அபராதம் விதித்தது.
இதுகுறித்து பேருந்து உரிமையாளர்கள் கேட்டபோது, “2021ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ படி தமிழகத்தில் அண்டை மாநிலப் பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, நாங்களும் வசூலிக்கிறோம்,” என கேரள, கர்நாடக போக்குவரத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அந்தந்த மாநில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
“மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் தமிழக சாலைவரி ரூ.1,50,000, ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ சாலை வரி ரூ.90,000, கேரளா, கர்நாடகா சாலை வரி ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4.50 லட்சம் செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,” என்று அந்தச் சங்கங்களைச் சேர்ந்தோர் கூறினர்.
இதனிடையே, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 10) சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாத நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்வதால் இனி மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்துக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்து வசதிகளை அதிகாரிகள் சரிப்படுத்தி வருகின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் ஆந்திராவுக்கு 70 பேருந்துகளும் கர்நாடகாவுக்கு 183 பேருந்துகளும் கேரளாவுக்கு 85 பேருந்துகளும் இயக்க அனுமதி உள்ளது என்று கூறிய அதிகாரிகள், தேவை இருக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றனர்.

