மதுரை: இந்து முன்னணி சார்பாக மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் மனமுருகி பாடிய கந்த சஷ்டி கவசம் சமூக ஊடகங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்றோர் ஒரே நேரத்தில், ஒரே குரலாக கந்த சஷ்டி கவசத்தைப் பாடினர்.
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை சமூக ஊடகங்கள் வழி சென்றடைந்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டை யுடியூப் தளம் வழியாக கண்டு மகிழ்ந்தனர்.
“அனுமதி பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர் அலையில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் மாநாட்டைப் பார்த்துள்ளனர். இது ஒரு பிரம்மாண்ட சாதனை,” என இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆன்மிகத்திற்கு என ஒரு சக்தி உள்ளது என்பதை இம்மாநாடு நிரூபித்துள்ளதாக பக்தர்கள் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

