சென்னை: நள்ளிரவு வேளையில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மாநகரில் சட்டம், ஒழுங்கைச் சீர்படுத்தும் வகையில் அந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் சென்னைக்கு அருகே உள்ள மணிமங்கலம் பகுதியில் பட்டப்பகலில் இரு இளையர்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். இருவரும் கானா பாடகர்கள் என்பதும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியைப் புகழ்ந்து பாட மறுத்ததால் கொல்லப்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம் மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து, சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. மாநகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை, வாகனச் சோதனை நடத்தப்பட்டு, போதைப்பொருள் விற்பனை உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, போதைப்பொருள் ஒழிப்பிலும் பெண்கள் பாதுகாப்பிலும் தீவிர கவனம் செலுத்தும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும் இதுபோன்ற நள்ளிரவு சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

