சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அது தொடர்பாக தமிழ்நாட்டின் கொசு ஒழிப்புத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தி என்பவரும் சமூக அமைப்பு ஒன்றின் செயலாளர் ரவீந்திரநாத் என்பவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கொசு ஒழிப்புப் பணியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி, பலிகடா ஆக்குவதைக் கைவிட வேண்டும்,” என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
“தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள், டெங்கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், போதிய அளவில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
“அதேநேரம், கொசு ஒழிப்புப் பணிக்கு புதிய பணியாளர்களை நியமிக்காததும் ஏராளமான பணியாளர்களை நீக்கம் செய்வதும் அவர்களுக்குத் தொடர்பில்லாத வேறு பணிகளை வழங்குவதும் தொடர்ந்து வருகிறது.
“தமிழ்நாட்டில் 80,000 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் 23,000 பேர்தான் பணியில் இருக்கின்றனர். அவர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை உள்ளாட்சி அமைப்புகள் கைவிட வேண்டும்.
“தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதனால், டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
“ஆனால், மூவருக்கு மேல் டெங்கியால் பாதிக்கப்பட்டால், அந்தக் களத்தின் பணியாளருக்கு ரூ.200 அபராதம் மற்றும் ஒருநாள் கூலி ரத்து போன்ற நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை,” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

