உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூவருக்கு தானம்

உதகையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூவருக்கு தானம்

2 mins read
e6745d9a-dc8f-4e95-bc57-ffe7e9599d47
அர்ஜுனன். - படம்: தமிழக ஊடகம்

உதகை: உதகையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும்‌ கோவையில்‌ உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில்‌ உள்ளவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இது குறித்து உதகை மருத்துவக் கல்லூரி தலைவர் கீதாஞ்சலி, “நீலகிரி மாவட்டம் உதகை நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ‌(62). இவர் சுயநினைவற்ற நிலையில்‌, உதகை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ உள் நோயாளியாக கடந்த 25ஆம் தேதி அதிகாலை 1.05 மணியளவில்‌ சேர்க்கப்பட்டார்‌. அவருக்கு ரத்தக்‌ கொதிப்பின்‌ காரணமாக, மூளையில்‌ ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது சிடி ஸ்கேன் மூலம்‌ தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனே வெண்டிலேட்டர் உதவியுடன்‌ தீவிர சிகிச்சைப் பிரிவில்‌ தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

“இந்நிலையில்‌, அவர்‌ சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்திருக்கலாம்‌ என 25ஆம் தேதி காலை 8.20 மணியளவில்‌ கருதப்பட்டது. அவரது மகன்களிடம்‌ இதை மருத்துவர்கள்‌ எடுத்துக் கூறினர்‌. உடனே மகன்கள்‌, உடல்‌ உறுப்பு தானம்‌ மேற்கொள்ள முன்வந்தனர்‌. இதையடுத்து இரண்டு ரத்தப்‌ பரிசோதனைகள்‌, விதிமுறைகளின்‌ படி 6 மணி நேர இடைவெளியில்‌ மேற்கொள்ளப்பட்டு 25ஆம் தேதி இரவு 9 மணியளவில்‌ அர்ஜுனன் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று திருவாட்டி கீதாஞ்சலி கூறினார்.

“தமிழ்நாடு உடல்‌ உறுப்பு தான ஆணையம்‌ விதிமுறைகளின்‌ படி, அவரது இரண்டு சிறுநீரகங்கள்‌ மற்றும்‌ கல்லீரல்‌ வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து அறுவை சிகிச்சை மூலம்‌ அகற்றப்பட்டு, மதியம்‌ 12 மணியளவில்‌ நிறைவேற்றப்பட்டது. இந்த உறுப்புகள் ஈரோடு மற்றும்‌ கோவை மருத்துவமனைகளில்‌ உள்ள பயனாளர்களுக்கு இன்றே தானமாக வழங்கப்பட உள்ளது. இந்த உடல்‌ உறுப்பு தானம்‌ வாயிலாக மூன்று நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது,” என்று திருவாட்டி கீதாஞ்சலி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்