சென்னை: தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை சனிக்கிழமை (மார்ச் 7) நேரில் சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையேயான உறவு கசப்பாகவே அமைந்தது.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மாநில அரசு எடுத்த பல முடிவுகளுக்கு ஆளுநர் ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை மாற்ற வேண்டும் என்றும்கூட தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் மார்ச் 5 அன்று பதவி விலகினார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசு சார்பாக ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

