சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஒரேயோர் மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என திரு விஜய்யிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினர். ஆனால், அதை மீறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ்.
இதற்கு திமுக தரப்புடன் ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவார்த்தையே முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது. எனினும், தேர்தல் முடிந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறி தவெக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரசும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏறக்குறைய அரை மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்தின் நிர்வாக ரீதியிலான பல்வேறு திட்டங்கள் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விரிவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், தவெக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், இந்தச் சந்திப்பு அந்த இடத்துக்கான பேச்சுவார்த்தையாகவே இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இதனிடையே, மாநிலங்களவை இடம் குறித்து முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மூத்த தலைவர் ப.சிதம்பரமும் முதல்வர் விஜய்யும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

