புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாகத் தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே தற்போதுள்ள உறவுகள் சீராக இல்லை; எந்நேரமும் போர் மூளும் என்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகவும் போர்தான் தீர்வு என்றும் பலவித கருத்துகள் நிலவுகின்றன.
இவ்விரு நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் நடைபெறும் இவ்வாண்டின் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2025 ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடரில் பாகிஸ்தானும் கலந்துகொள்வது அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அரசியல் சூழல் சுமூகமாக இல்லாத தருணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடாது, தொடர் ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்தி வெளியாகிவருகிறது. ஆசிய கிண்ணத்தைப் போலவே இந்தியா-பங்ளாதேஷ் தொடரும் ஒத்திவைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

