சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடம் 26% நீர்நிலைகளை உள்ளடக்கியது என உவகை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, போதுமான நீரியல் ஆய்வுகள் இன்றி இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என அந்நிறுவனத்தின் இயக்குநர் விதுபாலா வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான நிலையத்துக்கான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர் அளித்த நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை என்றார்.
ஆய்வு செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது என்றும் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் உவகை ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு வல்லுநர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது என்றும் விதுபாலா கூறினார்.
“இந்த ஆய்வில் பரந்தூரில் 26.5% நீர்நிலைகளாக இருப்பது தெரிய வந்தது. ஆனால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
“பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை மாநகரம் வெள்ளப் பாதிப்பில் சிக்கும். எனவே மாற்றுவழி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,” என்று விதுபாலா வலியுறுத்தி உள்ளார்.

