சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் பெரும் சவாலாக உள்ளன என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாடு சனிக்கிழமை (அக்டோபர் 19) சென்னையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக உள்ளன.
“அவற்றின் மூலம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும்.
“தமிழ்நாட்டில்கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பக்கூடியவர்களைத் தேடி கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது.
“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே தமிழ்நாடு அமைதியான மாநிலம். அங்கு அமைதியின்மையை உருவாக்க ஏதாவது வதந்தியைப் பரப்புவீர்களா என்று ஒரு யூடியூபர் சம்பந்தப்பட்ட வழக்கில் கடுமையாகச் சாடியிருந்ததை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
“ஆகவே, சமூக ஊடகங்களில் வரக்கூடிய வதந்திகளைப் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
“இந்த மாநாட்டை முன்நின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறை, அனைத்துத் தளங்களிலும் சட்ட அமலாக்கத்துக்கு, குறிப்பாக போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படக்கூடிய குற்றவாளிக் கும்பல்கள், மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக ஊடக வதந்திகள் ஆகியன தொடர்பான நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய பொறுப்பை ஏற்றுள்ளது,” என்று முதல்வர் ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.

