குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: சிவி சண்முகம் ஆவேசம்

2 mins read
0156e249-6c48-4eec-99f0-662b62396a99
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய சிவி சண்முகம். - படம்: ஊடகம்

சென்னை: இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிரியாவில் குடும்ப ஆட்சிக்கு மக்களே முடிவு கட்டியதுபோல் தமிழகத்திலும் திமுக குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வு ரத்து, புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள்கள் புழக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தியும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவின் குடும்ப ஆட்சியை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என ஆவேசமாகக் கூறினார்.

“எங்களுக்குள் எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? எங்கே இருக்கிறது சலசலப்பு? சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று காத்திருப்பவகள் இங்கே நிரம்பி இருக்கும் எங்கள் தொண்டர்களைப் பாருங்கள்.

“அதிமுக யாரையும் நம்பி இல்லை. தொண்டர்கள்தான் அதிமுகவின் பலம். நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் சலசலப்பு என சிலர் உண்மைக்கு புறம்பாகக் கூறி வருகிறார்கள்.

“இலங்கையில் ராஜபக்சேவின் குடும்பமே ஆட்சியில் இருந்தது. கடைசியில் அவர்களுக்கு என்ன ஆனது? நாட்டு மக்களே வீடுகளில் புகுந்து அவர்களை அடித்து விரட்டி விட்டனர்.

“அதுபோல் பங்களாதேஷிலும் நடந்த குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவு காட்டினார்கள். மேலும் சிரியாவிலும் குடும்ப ஆட்சிக்கு எதிராக கொதித்த மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள்.

“இதே நிலைமை திமுகவுக்கும் வரும். மக்கள் பொங்கி எழுந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகும்? இதன் முன்னோட்டமாகத்தான் உங்கள் மீது சேற்றை வாரி அடித்தார்கள். இன்றும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது எடப்பாடி பழனிச்சாமிதான். ஸ்டாலினுக்கு என்ன ஆளுமை உள்ளது?” என ஆவேசமாகப் பேசினார் சிவி சண்முகம்.

குறிப்புச் சொற்கள்