ராமேசுவரம்: பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு 33 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட உள்ளது.
தற்போது பாம்பன் கலங்கரை விளக்க வளாகத்தில் சிறுவர் விளையாடும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கலங்கரை விளக்கத்தைக் காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கத்தை திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இந்து தமிழ் திசை தகவல் தெரிவிக்கிறது.
பாம்பன் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மேற்கே பாம்பன் சாலை பாலம், ரயில் பாலம், மண்டபம், கிழக்கே ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் கெந்தமாதன ராமர் கோயில், தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதி, வடக்கே பாக்ஜலசந்தி கடல் பகுதி, பாம்பன் தீவின் இயற்கை அழகு, கோரி தீவு, குருசடை உள்ளிட்ட குட்டித் தீவுகளைக் கண்டு ரசிக்க முடியும்.
பாம்பனில் 1846ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்தக் கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய்யும், தாவர எண்ணெய்யும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1923 ஆம் ஆண்டு பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டன.
கடந்த 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் பெற்று பாம்பன் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகு கலங்கரை விளக்கம் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 65 கலங்கரை விளக்கங்களிலும், தமிழகத்தில் 11 கலங்கரை விளக்கங்களிலும் பார்வையிடுவதற்கு சுற்றுலா திட்டத்துக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. 2021 பிப்ரவரியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.