சென்னை: கட்சிப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னைத்தான் தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக என்ற கட்சி தனிச்சொத்து அல்ல என்றும் வெள்ளிக்கிழமை (மே 30), சென்னையில் நடைபெற்ற பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
“எப்போதும் நான் என்று சொல்லாமல் நாம் என்றே சொல்வேன். பாமக என்பது நானோ அல்லது வேறு யாருமோ கிடையாது. நீங்கள்தான் பாமக. நீங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை. பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது.
“பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னை தலைவராக தேர்வு செய்தீர்கள். எனவே உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக பணியாற்றுவதை அடிப்படை கடமையாக கொண்டு செயல்படுவேன். பொறுப்புகள் வரும் போகும். உங்கள் அன்பு பாசம் எப்போதும் போகாது,” என்றார் அன்புமணி.
பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் என அன்புமணி அறிவித்துள்ளார்.
முன்னதாக, திலகபாமாவைப் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
பாமகவில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சி பிளவுபட்டு நிற்கிறது.