சென்னை: மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின்கீழ் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தென் தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிகளும் இடம்பெற்றுள்ளது. இது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது என்று பட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மருத்துவர் ராமதாஸ், “தமிழகத்தின் நிலப் பகுதிகளிலும் கடல் பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தமிழக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். அதன்பின் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
“இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சின் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதிக் கொள்கையின் 10வது சுற்று ஏல அறிவிப்பில், தென் தமிழகத்தின் 9,990.96 சதுர கி.மீ. ஆழ்கடல் பரப்பு இடம்பெற்றுள்ளது.
“இத்திட்டத்தினால், கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கக்கூடும். மீன்வளம் குறையும். மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை இத்திட்டம் அதிகமாக்கும்.
“எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதுடன், அதற்கான ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்,” என வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.