சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “நாடு போற்றும் இத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024-2025ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
“இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் (கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர்) பயனடைவார்கள்.
“இந்த உத்தரவின்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
“தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்களுக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
“சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

