சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்று முதல் முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என மூன்று நாள்கள் விடுமுறை.
ஜனவரி 18, 19 ஆகிய இரு நாள்கள் சனி, ஞாயிறு விடுமுறை. ஜனவரி 17 மட்டும் வேலை நாளாக உள்ளது.
இந்நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் திருநாளைக் கொண்டாட, விடுமுறை நாள்களுக்கு இடைப்பட்ட ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்றும் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றதாக தமிழ்நாடு அரசு சனிக்கிழமை (ஜனவரி 4) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அந்தக் கோரிக்கைகளை ஏற்று, ஜனவரி 17 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
அந்த விடுமுறையை ஈடுசெய்ய, ஜனவரி 25 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் அரசு உத்தரவிட்டு உள்ளது.