சென்னை: பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகளின் மூலம் கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார் 640,000 பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தொடங்கியது. பொங்கலுக்காக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை ஆறு நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொங்கலைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவுக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளில் 217,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களில் ஒட்டுமொத்தமாக 640,000 பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். வழக்கமாக பண்டிகைக் காலத் தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க சொந்த ஊர் செல்வதை மக்கள் விரும்புகின்றனர். இதனால் சொந்த ஊருக்குச் சென்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டு வருகிறது.