சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புப்படுத்தி பேசியது சர்ச்சை ஆனது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளைப் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காவல்துறையிடம் 140க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. அந்த விவகாரம் பொன்முடியின் அமைச்சர் பதவியைப் பறித்தது.
மேலும், உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து, பொன்முடி சர்ச்சைப் பேச்சு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நடைபெற்றது.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முன்னிலையாகி, பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட அனைத்துப் புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் முடித்து வைக்கப்பட்டது எனக்கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி, இந்தப் புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என காவல்துறையினர் எப்படி முடிவுக்கு வந்தனர் என்று வினவினார்.
காவல்துறையினர் புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, வேண்டுமானால் புகார்தாரர்கள் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அவர், “பொன்முடி தெரிவித்த கருத்து அவருடைய சொந்தக் கருத்து அல்ல. 1972ஆம் ஆண்டு ஒரு சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்து. அதைத்தான் பொன்முடி மேற்கோள் காட்டிப் பேசினார்,” என்றார்.
அதனைக் கேட்ட நீதிபதி, “சைவம், வைணவம் மற்றும் பெண்கள் தொடர்பாக பொன்முடி பேசிய முழு காணொளியையும் அவர் மேற்கோள் காட்டிப் பேசியதாகக் கூறப்படும் 1972ஆம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.