சென்னை: ஆபாச பேச்சு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதில் தமிழகக் காவல்துறை தயக்கம் காட்டினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் இந்து மதத்தையும் பெண்களையும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றின் மீதான புலன் விசாரணை நிலுவையில் உள்ளது என விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசுவதற்கு எவ்வளவோ பிரச்சினைககள் இருக்க அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இப்படிப் பேச வேண்டும் என வினவினர். அமைச்சராக இருந்தவர் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும் என்றனர்.
இவ்வழக்கில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என எச்சரித்தனர்.