கோவை: விசைத்தறி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஏழாவது நாளைத் தொட்ட நிலையில் ரூ. 250 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறிக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) தொடர்ந்து ஏழாவது நாளாக அவர்களின் போராட்டம் நடைபெற்றது.
இதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு தரப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்குவது குறித்து பேசினால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வரும்.
இதனால் நாளொன்றுக்கு ரூ. 35 கோடி ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏழாவது நாளாக போராட்டம் நடைபெறுவதால் இதுவரை ரூ. 250 கோடிக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் முடிவில் வேலை நிறுத்த போராட்டத்தின் அடுத்த கட்டம் முடிவு செய்யப்படும் என கூலிக்கு நெசவு செய்யும் தரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பூபதி தெரிவித்தார்.

