சென்னை: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குதிரையில் சென்று உணவு விநியோகித்த இணையவழி உணவு விநியோகச்சேவை வழங்கும் நிறுவன ஊழியருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அந்த ஊழியர், உணவுப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு குதிரையில் சென்ற காட்சி பலரை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தத் தனியார் நிறுவன ஊழியர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமல் ஒரு வெள்ளைக்குதிரைமீது அமர்ந்து கம்பீரமாகச் சென்றார்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மட்டுமன்றி பெட்ரோல், டீசல் பயன்பாட்டைத் தவிர்த்து உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்க அந்த ஊழியர் வித்தியாசமான முயற்சியில் ஈடுட்டதாகத் தெரிகிறது.
ஊழியர் குதிரையில் சென்ற காட்சியுடன் கூடிய காணொளியும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறை, பாதுகாப்பான விநியோக முறை, போக்குவரத்து நெரிசலுக்குச் சரியான தீர்வு எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

