சென்னை: தமிழர்களின் கலாசார, பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்துவரும் தமிழர்கள், இனம், சமயம் ஆகியவற்றைத் தாண்டி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை.
இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்த தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், “இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்தபோது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. ‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.
“நாட்டுப்புறத்தான் தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள். உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார் என தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.