சென்னை: பாலியல் வன்கொடுமை புரிவோருக்கு கடுமையான அளவில் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் பிரேமலதா தலைமையில் நடைபெற்ற தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, மதுவிலக்கை அமல்படுத்துதல், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கினால்தான் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
“அத்துடன் கஞ்சா, டாஸ்மாக் மது உள்ளிட்ட போதை கலாசாரம்தான் இதற்கெல்லாம் காரணமாக உள்ளது.
“திருப்பரங்குன்றம் மலை குறித்து இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினை இப்போது ஏன் வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மதம், சாதியைத் துாண்டிவிட்டு அரசியல் செய்வதாக மக்கள் கருதுகின்றனர்,” என்று கூறினார்.