பிரயாக்ராஜ்: அதிபர் திரௌபதி முர்மு திங்களன்று (பிப்ரவரி 10) மகா கும்பமேளா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரயாக்ராஜ் நகருக்கு வருகையளித்தார். அங்கு அவர் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் படகுப் பயணம் செய்து, ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உணவளித்து, புனித நீராடினார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் அக்ஷயாவத், படே ஹனுமான் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
விழா தொடங்கி 28 நாள்களுக்குப் பிறகு, மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய மூன்று அமிர்த ஸ்நானங்கள் முடிந்த பின்னரும் 1.57 கோடி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குள் புனித நீராடினர்.
ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்திய அதிபரின் வருகையையொட்டி பிரயாக்ராஜ் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனவரி 13ல் தொடங்கிய மகா கும்ப மேளா விழா, பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும்.

