சென்னை: சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, மிகவும் முக்கியமான வருவாய் என்றும் மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் அதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அந்நகர மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஒவ்வொரு அரையாண்டுத் தொடக்கத்தின் முதல் 30 நாள்களுக்குள் சொத்து வரியை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84 (1)ன்படி, நிகர சொத்து வரியில் 5 விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தொடங்கியுள்ள 2025-26ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

