திருப்பத்தூர்: தடுப்பூசி போட்டதால் இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்ததாக, குழந்தையின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர், பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் - கிருத்திகா தம்பதியினரின் இரண்டு வயது மகன் பூமீசுக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர்.
குழந்தையை உறங்க வைத்த நிலையில் குழந்தை எழாததால் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில் குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.
குழந்தையின் உடலைக் காவல்துறையினர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றதைக் கண்டித்து வாணியம்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆம்புலன்சை துரத்தி வந்த உறவினர்கள், அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்சை வழிமறித்து குழந்தையின் உடலைக் கேட்டும், தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறியும் இதற்கு உரிய நீதி வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.