சென்னை: திமுக அரசின் அவலங்களையும் மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டுசெல்ல முதல்கட்டமாக மூன்று பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக மூன்று பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.10.2024 வியாழக்கிழமை மாலை சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அடுத்ததாக 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டிவனம், 26.10.2024 சனிக்கிழமை மாலை சேலம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம் என்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

