சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் தேர்தல் அலுவலர்களுக்கு ‘கியூஆர் குறியீடு’ கொண்ட அடையாள அட்டையை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கவுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதையொட்டி, பல்வேறு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் அலுவலர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு உரிய அனுமதிச்சீட்டுடன் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
தொடர்பில்லாதவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த இந்தக் ‘கியூஆர்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதி இல்லாதவர்கள் நுழைவதைத் தவிர்க்கவே, ’கியூஆர்’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அட்டைகள் தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணும் ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.
இதற்கிடையே, சென்னையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பணியின்போது முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது எனக் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் எந்தவிதமான சலசலப்புக்கும் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் விவரித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

