சென்னை: சென்னையில் ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்று அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் அங்குள்ள மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது, மாணவர்கள் ராகுல் காந்தியிடம் கல்வி, அரசியல் என பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
அவர்களில் ஒரு மாணவன், பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் செல்வந்தர்களுக்கு ஆதரவான பொருளாதாரத் திட்டங்களில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பொருளாதார அடிப்படையில் ‘டிரிபிள்-டவுன்’ (வெகுஜன பொருளாதாரத்தைவிட பணக்கார அல்லது மிகப்பெரிய கார்ப்பரேஷன்களுக்கு ஆதரவான நிலைப்பாடு) என்பதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.
சமூகப் பார்வையில், நாங்கள் சமுதாயம் எவ்வளவு இணக்கமானதாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான மக்கள் போராடுவார்கள், அது நாட்டிற்கும் நல்லது என்று காங்கிரசின் பார்வை இருக்கும்,” என்றார்.
“அனைத்து நாடுகளுடனான உறவுகள் அடிப்படையில், மற்ற நாடுகளுடன் நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை ஒத்ததாகவே இருக்கும்,” என்று தெரிவித்தார்.

