தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1039வது சதய விழா சனிக்கிழமையன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ராஜராஜசோழனின் 1039வது சதய விழா சனிக்கிழமை தஞ்சை பெரியகோவிலில் மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் துவங்கியது.
விழாவில் உரையாற்றிய உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியபோது, “தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜசோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம். ராஜராஜசோழன், முன்னோர்களைக் காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார். தஞ்சாவூரைச் சுற்றிலும் மக்கள் வாழ முக்கிய தேவையான உணவு உற்பத்தியைத் தொடங்கினார்.
ராஜராஜசோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன் நாட்டில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும்; அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்திரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன் ஆட்சியின் கீழ் ராஜராஜன் கொண்டு வந்தார்.
பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோயில்களைப் பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோயிலைக் கட்ட வேண்டும் எனக்கருதி, 1006ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010ஆம் ஆண்டு முடித்ததுதான் இந்த தஞ்சாவூர் பெரிய கோவில்.
ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு இன்று அரசு விழா நடத்துவதுடன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கு ராஜராஜன் தஞ்சை தமிழ்ப் பல்கலை என தமிழக அரசு பெயர் சூட்ட வேண்டும். இது ராஜராஜசோழனுக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும்,” என்று அவர் பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
சதய விழா துவக்க அரங்கில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், மக்கள் கூட்டமின்றி நாற்காலிகள் காலியாக கிடந்தன.
அதையடுத்து, விழாவில் பேசிய தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், “சதய விழா அழைப்பிதழில் நான்கு முதல் ஐந்து பக்கங்களில் பலரது பெயர்கள் போடப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்களின் பெயர் அழைப்பிதழில் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்கள் எல்லாம் வந்திருந்தால் அரங்கம் நிறைந்திருக்கும். நாற்காலிகள் காலியாக இருக்காது.
“ராஜராஜசோழனின் சதயவிழாவை பெருமையாக பேசுவது மட்டும்போதாது. தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் எல்லாரும் வர மாட்டார்கள்.
“அரசியல் என்பது சேவை செய்வது. இந்தச் சேவையை யார் சரியாக செய்கின்றனரோ, அவர்கள் மட்டும் தான் தஞ்சை பெரியகோவிலுக்குள் வர முடியும். தவறு செய்திருந்தால் பதவி பறிபோகும் என்று சொல்லப்படுகிறது.
“துணை அதிபராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பிறகு தான் அதிபரானார். அதை நினைவில்கொள்ள வேண்டும். இறை வழிபாடு இருந்தால் தான் நிம்மதி கிடைக்கும்,” என அவர் பேசினார்.
ஆளுங்கட்சி வட்டாரத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி.,க்கள் யாரும் சதய விழாவில் பங்கேற்காத நிலையில், அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.