அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் அவதாரத் தினமான ஆடி திருவாதிரை விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை இணைந்து விழாவை நடத்தின.
வேளாண்மை, நீர் மேலாண்மை, அரசியல் நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாமன்னர் ராஜேந்திர சோழனைப் பின்பற்றி நடப்பதற்கான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பகுதியாக கங்கைகொண்ட சோழபுரம் மென்மேலும் வளர்ச்சிப் பெற வேண்டும் என்று நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய ஆட்சியர் மிருணாளினி தெரிவித்தார்.
விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
சோழர் காலச் சிற்பக் கலை, நீர் மேலாண்மை, கடல் கடந்த போர்த்திறன் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இவ்விழா ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


