சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களைக் கண்டுவரும் சூழலில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அப்போது, தனது நீண்டகால நண்பருக்கான ஆதரவை ரஜினி வெளிப்படுத்தியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
புதன்கிழமை (மே 6) சந்தித்தபோது, “எனது நெருங்கிய நண்பரான தங்களின் வெற்றி நேரத்தில் மட்டுமல்லாமல், இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்,” என்று ஸ்டாலினிடம், ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும் ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்சாரி, தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
“என் வெற்றிக்கு திரு ஸ்டாலின்தான் காரணம். அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
“அப்போது நீங்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வர வேண்டுமென கூறினேன். இதற்காக நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பதவியைக்கூட ராஜினாமா செய்கிறேன் என்றேன். ஆனால் அவரோ, அப்படியெல்லாம் பேசக்கூடாது எனக் கூறிவிட்டார்,” என்றார் திரு தமிமுன் அன்சாரி.

