சென்னை: சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பழைய மாணவர்களைச் சமாளிப்பது எளிதான செயலன்று எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக எளிதாக அதனைச் செய்கிறார் எனவும் பேசியிருந்தார்.
மூத்த அமைச்சர்களைக் குறிப்பிட்டு, ரஜினிகாந்த் அவ்வாறு பேசியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த துரைமுருகன், “சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகிப் போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து, கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமலா போகிறது,” என்று கூறினார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இந்நிலையில், தமது பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் துரைமுருகன், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்கள் இருவரும் எப்போதும்போல நண்பர்களாகவே இருப்போம்,” என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, ரஜினிகாந்தும் துரைமுருகன் பேசியதில் வருத்தம் இல்லை எனக் கூறியிருந்தார்.